மலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரவா? – தகவல் வைரலானதால் போலீஸ் விசாரணை

Spread the love

மலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரவு என்ற தகவல் வைரலானதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோலாலம்பூர்,

மலேசியாவில் மலேசிய ஐக்கிய சுதேச கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிரதமர் முகைதீன் யாசின் நடத்தி வருகிறார். அவருடைய ஆட்சிக்கு எதிர்க்கட்சியான மக்கள் நீதிக்கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிம் சிம்மசொப்பனமாக உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர் திடீரென முகைதீன் யாசின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், தன்னிடம் ஆட்சி அமைக்கத்தேவையான பெரும்பான்மை பலம் உள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் மன்னர் அல்சுல்தான் அப்துல்லாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் முகைதீன் யாசின் ஆட்சியை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் தனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என கூறியதாக தெரிகிறது.

மேலும் 121 எம்.பி.க்கள் அவர் பிரதமர் ஆவதை ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலானது. இதுபற்றி போலீசிடம் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணையை மலேசிய போலீஸ் முடுக்கி விட்டுள்ளது. அன்வர் இப்ராகிம் தனது ஆதரவாளர்கள் பட்டியலை தருமாறு மலேசிய போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலேசியாவில் தவறான தகவலை பரப்பினால் அதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page