மருத்துவ பரிசோதனைக்கு முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- உலக அரங்கில் அதிர்ச்சி

Spread the love

சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.


பீஜிங்,

உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, சீனா என பல முன்னணி நாடுகளும் உருவாக்கி, அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைகளில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசிகள் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தில் உள்ளதால், இவை செயல்பாட்டுக்கு வர மேலும் சில மாதங்கள் ஆகலாம் எனக்கூறப்படுகிறது.

சீனாவில், 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த நிலையில், இறுதிக்கட்ட சோதனையை முடிக்கும் முன்பாகவே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை அந்தநாட்டின் அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.

இதையொட்டி அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தியான் பாகுவோ நிருபர்களிடம் கூறுகையில், “60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட முடிவுகள், தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை காட்டுகின்றன” என குறிப்பிட்டார். சீனாவில் தடுப்பூசியின் மருத்துவ சோதனைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னரே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு விட்டன என்பது உலக அரங்கை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இருப்பினும் தடுப்பூசிகளின் சோதனை பயன்பாடு, மருத்துவ பரிசோதனை தரவுகளின் ஒரு பகுதியாக இருக்காது என்று கூறி உள்ளார். மருத்துவ பரிசோதனையை முடிக்காத நிலையில் தடுப்பூசிகளை போடுவது என்பது உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகளும், நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page