அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் 26 ந் தேதி இந்தியா வருகின்றனர்.
புதுடெல்லி,
இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் இடையே கடந்த 2018 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ‘இரண்டுக்கு இரண்டு’ மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை 3 வது ஆண்டாக இந்த ஆண்டும் நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தை வருகிற 27 ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் 26 ந் தேதி இந்தியா வருகின்றனர். அவர்களுடன் இந்தியாவின் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த சந்திப்பின்போது பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன.
இந்த சந்திப்பு குறித்து மைக் பாம்பியோ நேற்று தனது டுவிட்டர் தளத்தில், ‘எமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளான இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்காகவும், இந்தியாவுடனான ‘இரண்டுக்கு இரண்டு’ மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்காகவும் செல்ல இருக்கும் பயணத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.