அமெரிக்காவில ஒரே நாளில் 89 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் நேற்று முன்தினம் 88 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்டுள்ளது.
அங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
இதேபோன்று கொரோனாவுக்கு அங்கு இரையானோர் எண்ணிக்கை 2.29 லட்சத்தை நோக்கி விரைகிறது.
வரும் செவ்வாய்க்கிழமை அங்கு ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்கம் வேகம் எடுத்திருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கு தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஜனாதிபதி டிரம்பின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் கொரோனாவால் 4 கோடியே 53 லட்சத்து 98 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 87 ஆயிரத்து 304 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 30 லட்சத்து 31 ஆயிரத்து 886 பேர் மீண்டனர்.