கொரோனா 2-வது அலை அச்சம்; ஒடிசாவில் வரும் டிசம்பர் 31ந்தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு

Spread the love

கொரோனா பாதிப்புகளின் 2-வது அலை அச்சத்தினால் ஒடிசாவில் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களையும் மூடும்படி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

புவனேஸ்வர்,

நாட்டில் கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச்சில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்பின்னர் ஆன்லைன் வழி கல்விக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களின் விருப்பத்தின்பேரில் பள்ளிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், சில மாநிலங்களில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே, எண்ணற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்புகள் தென்பட்டு உள்ளன. இதனால் அந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளின் 2-வது அலை ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இதனை கவனத்தில் கொண்டு ஒடிசாவில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளி கூடங்களையும் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை மூடுவது என அரசு முடிவு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆனால், தேர்வுகள் நடத்துவதற்கும் (பாட தேர்வு, போட்டி தேர்வு மற்றும் நுழைவு தேர்வு), மற்றும் பிற நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வி தொடர அனுமதி அளிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்துள்ள சுகாதார செயல்பாட்டு வழிமுறைகளின்படி, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அல்லது அது தொடர்புடைய பணிகளுக்காக செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page