அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் உள்ள 23.9 கோடி வாக்காளர்களில், 9.40 கோடி பேர், முன்னதாகவே, தபால் வாயிலாக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இதுவரை 46 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நவேடா ஆகிய நான்கு மாகாணங்களில், ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பிடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோர்ட்டில் டிரம்ப் தரப்பில் தொடந்த வழக்கு தள்ளுபடியானது. இதனை தொடர்ந்து ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ஜார்ஜியா மாகாண அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. ஜார்ஜியா தேர்தல் முடிவுகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் இருப்பதால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.