சட்ட விரோத வாக்குகள் எண்ணப்படுவதை தவிர்க்க சட்டத்தின் அனைத்து அம்சங்கள் மூலமாகவும் தீவிரமாக முயற்சி செய்வேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். ஜோ பைடனுக்கு 50.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், டிரம்பிற்கு 47.8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இதுவரை 46 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நவேடா ஆகிய நான்கு மாகாணங்களில், ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா, நவேடா ஆகிய மாகாணங்களில் ஜோ பிடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்தக் கோரி கோர்ட்டில் டிரம்ப் தொடந்த வழக்கு தள்ளுபடியான நிலையில், ஜார்ஜியா மாகாண அரசு மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்நிலையில் சட்ட விரோத வாக்குகள் எண்ணப்படுவதை தவிர்க்க சட்டத்தின் அனைத்து அம்சங்கள் மூலமாகவும் தீவிரமாக முயற்சி செய்வோம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆரம்பத்தில் இருந்தே, நியாயமான முறையில் வாக்குச்சீட்டுகளை கணக்கிட வேண்டும், சட்டவிரோத வாக்குகளை கணக்கிடக்கூடாது என்று நாங்கள் கூறி வந்தோம். ஆனால் ஜனநாயகக் கட்சியினரின் இந்த அடிப்படைக் கொள்கையை தொடர்ந்து மீறி வந்தனர்.
இருப்பினும் அமெரிக்க மக்களுக்கு எங்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்பதை உறுதிப்படுத்த சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மூலமாகவும், சட்ட விரோத வாக்குகள் எண்ணப்படுவதைத் தவிர்க்க நான் முயற்சி செய்வேன். இது எங்கள் முழு தேர்தல் செயல்முறையின் நேர்மை பற்றியது. மக்களுக்காகவும் தேசத்துக்காகவும் போராடுவதை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.