கொரோனா தொற்று நபருடன் தொடர்பு; சுய தனிமைப்படுத்துதலில் இங்கிலாந்து பிரதமர்

Spread the love

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சக எம்.பி.யுடன் கொண்ட தொடர்பால் சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.


லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த ஆண்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார். பின்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கும் கொண்டு செல்லப்பட்டார். இதில் குணமடைந்து அவர் சிகிச்சை முடிந்து திரும்பினார்.

அவர் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இருந்து பணியை தொடர்ந்து வருகிறார். கடந்த வாரம் எம்.பி.க்கள் குழுவுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், அவருடன் தொடர்பில் இருந்த எம்.பி. லீ ஆண்டர்சன் என்பவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் நேற்றிரவு முதல் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். முன்பே பாதிப்பு ஏற்பட்டு பின் அதில் இருந்து ஜான்சன் விடுபட்ட நிலையிலும், தனிமைப்படுத்துதல் விதிகளில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.

ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்படும் சாத்தியம் பற்றியும் கேள்வி எழாமல் இல்லை. உலகின் சில பகுதிகளில் ஒரே நபருக்கு 2 முறை கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள அரிய சம்பவங்களும் நடந்துள்ளன.

கடந்த ஏப்ரலில் நெவாடாவில் ரெனோ பகுதியில் 25 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு லேசான அறிகுறிகளே இருந்தன.

இதன் பின்னர் கடந்த மே மாதத்தில் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிரமடைந்தது. இதுபோன்ற சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட்ட நபருடனான தொடர்பை தொடர்ந்து ஜான்சன் சுய தனிமைப்படுத்துதலில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page