வேல் யாத்திரைக்கு சென்றபோது கார்-லாரி மோதல்; நடிகை குஷ்பு உயிர் தப்பினார் டிரைவர் கைது

Spread the love

மதுராந்தகம் அருகே நடிகை குஷ்புவின் கார்- கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக கன்டெய்னர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.


மதுராந்தகம்,

கடலூரில் பா.ஜ.க. சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகை குஷ்பு சென்னையில் இருந்து கடலூர் நோக்கி காரில் புறப்பட்டு சென்றார். காரை முருகன் ஓட்டி சென்றார். காரில் குஷ்பு மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் என்ற இடத்தில் நேற்று காலை 9¼ மணியளவில் செல்லும் போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை குஷ்பு சென்ற கார் முந்தி செல்ல முயன்றது.

அப்போது குஷ்பு சென்ற கார் கன்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

டிரைவர் கைது

இதில் குஷ்புவின் கார் கதவு சேதம் அடைந்தது. குஷ்பு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து ஏற்பட்டதையடுத்து குஷ்பு மற்றும் காரில் இருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றொரு கார் மூலம் கடலூருக்கு சென்றனர்.

இந்த விபத்து குறித்து நடிகை குஷ்புவின் கார் டிரைவர் முருகன் மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தார். கன்டெய்னர் லாரி டிரைவரான அப்துல் அக்கிளை (வயது 54) கைது செய்து விசாரித்து வருகின்றனர். குஷ்புவின் கார் டிரைவரான முருகனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page