சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 மின்சார ரெயில் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசி பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் ஊழியர்களுக்காக 204 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக 40 சிறப்பு மின்சார ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கொரோனா தடுப்பு முதல் நிலை பணியாளர்களுக்காக முதற்கட்டமாக 150 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 204 சிறப்பு மின்சார ரெயில் சேவைகளாக அதிகரிக்கப்பட்டது. தற்போது நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது 40 சேவைகள் அதிகரிக்கப்பட்டு, 244 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையின் புறநகர்களான ஆவடி, கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக திருத்தணி வரை மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இதற்கான அட்டவணை, நேரம் முறையாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.