இங்கிலாந்துக்குள் வந்து சேர்ந்தது கொரோனா தடுப்பு மருந்து ரகசிய இடத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இங்கிலாந்து முழுக்க தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்படும்.
லண்டன்
அமெரிக்காவின் பைஸர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றது. தற்போது இங்கிலாந்துக்கான பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு வந்து சேர்ந்துள்ளது. இதனையடுத்து மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள ரகசிய இடத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இங்கிலாந்து முழுக்க தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து மொத்த 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.மேலும், முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, கொரோனாவால் மருத்துவமனைக்கு வருபவர்களும், மரண எண்ணிக்கையும் பெருமளவு குறையும் என இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் தற்போது கொரோனா தடுப்பூசி வந்து சேர்ந்துள்ள நிலையில், அதை விரைவாகவும், அதிக அளவிலும் விநியோகம் செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான பணி துவங்கப்பட உள்ளது என்றார்.
முதற்கட்டமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் முதியோர் காப்பக ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.தொடர்ந்து, முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் முதியோர் இல்ல ஊழியர்கள் ஆகியவர்கள் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.இருப்பினும், முதியோர் இல்ல ஊழியர்கள், அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர்கள் முதல் கொரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்.