இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்டியை தொழிலாளர்களின் கணக்குகளில் செலுத்தி விடுமாறு இ.பி.எப். அமைப்புக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதற்கான பணியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கி உள்ளது. அதன்படி இந்த வட்டி தொழிலாளர்களின் கணக்குகளில் நேற்றுமுதல் செலுத்தப்படுகிறது. இந்த வட்டி தங்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதை தொழிலாளர்கள் இன்று முதல் காண முடியும்.
இதுபற்றி தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கூறுகையில், ‘‘2019–20 நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மீது 8.5 சதவீத வட்டி வழங்குவது எங்கள் முயற்சி ஆகும். இதற்கான அறிவிக்கையை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். தொழிலாளர்களின் கணக்குகளில் இந்த வட்டித்தொகையை செலுத்துவதற்கான செயல்முறை தொடங்கி உள்ளது’’ என குறிப்பிட்டார்.
இந்த பலனை 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.