நாட்டில் நவம்பர் வரையிலான நிதி பற்றாக்குறை ரூ.10.75 லட்சம் கோடியாக உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் தொழில், வர்த்தகம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பெருத்த பின்னடைவை சந்தித்து வருகிறது.
கடந்த நவம்பர் மாத இறுதி நிலவரப்படி நாட்டின் நிதிப்பற்றாக்குறை (வருமானத்துக்கும், செலவுக்கும் இடையேயான இடைவெளி) ரூ.10.75 லட்சம் கோடி ஆகும்.
இது 2020–21 நிதி ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் 135.1 சதவீதமாக உயர்ந்து இருப்பதை காட்டுகிறது. இந்த தகவலை சி.ஜி.ஏ. என்னும் கணக்கு கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் வரையில் மத்திய அரசின் மொத்த வருமானம் ரூ.8 லட்சத்து 30 ஆயிரத்து 851 கோடி என்றும், இது பட்ஜெட் மதிப்பீட்டில் 37 சதவீதம் என்றும் தெரிய வந்துள்ளது.
மொத்த செலவு, ரூ.19 லட்சத்து 6 ஆயிரத்து 358 கோடி ஆகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் 63 சதவீதம் ஆகும்.