பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தள்ளியதற்காக 30 பேர் கைது

Spread the love

பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தள்ளிய சம்பவத்தில் தொடர்புடைய 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


பெஷாவர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில் இந்துமத துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியும், கோவில் ஒன்றும் உள்ளது. இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் அந்த கோவிலில் விரிவாக்கப்பணிகள் சமீபத்தில் நடந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் முஸ்லிம் மதகுருக்கள் தலைமையில் 350க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அவர்கள் அந்த கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பகுதியை இடித்து தள்ளி சூறையாடினர். மேலும் கோவிலுக்கு அவர்கள் தீயும் வைத்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பலர், ஜாமியத் உலமா–இ–இஸ்லாம் கட்சி என்ற பயங்கரவாத கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.

அந்த பிராந்தியத்தில் பெரும் அதிர்ச்சியும், இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரெஹ்மத் சலாம் கட்டாக் என்பவரும் அடங்குவார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page