சிரியாவில் பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 28 பேர் உயிரிழப்பு

Spread the love

சிரியா நாட்டில் பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உடல் சிதறியும், கருகியும் உயிரிழந்தனர்.


டமாஸ்கஸ்,

சிரியா நாட்டில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இதை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால்தடம் பதித்தனர். அந்த நாட்டின் பல்வேறு நகரங்களை அவர்கள் கைப்பற்றி தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தனர்.

அமெரிக்க கூட்டுப்படைகளின் ஒத்துழைப்பை பெற்ற உள்ளூர்ப்படைகள் 5 ஆண்டுகள் சண்டை நடத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களை மீட்டனர்.

சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கூட சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல இடங்களில் பதுங்கி இருந்து கொண்டு தாக்குதல்களை தொடர்கின்றனர். குறிப்பாக அதிபர் ஆதரவு படைகள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு அங்கு டெயிர் எசோர்–பல்மிரா நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த பஸ்சை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் உடல் கருகியும், உடல் சிதறியும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பலியானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்று சிரியாவின் அரசு தரப்பு கூறுகிறது.

ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் படை வீரர்கள் என்று இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புதான் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

இதுபற்றி அந்த கண்காணிப்பகம் மேலும் கூறும்போது, ‘‘இந்த தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். அரசுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் மற்றும் படை வீரர்கள் பயணம் செய்த 3 பஸ்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’’ என தெரிவித்தது.

சம்பவம் நடந்த பகுதியில் அடிக்கடி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் மோதிக்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்தான் என்பது உறுதிசெய்யப்பட்டால் இந்த ஆண்டில் அவர்கள் நடத்திய மிக கொடிய தாக்குதல் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page