லடாக் மோதல் விவகாரம்: அடுத்த சுற்று பேச்சுவார்த்தை குறித்து இரு நாடுகளும் ஆலோசனை- சீன அரசு தகவல்

Spread the love

ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை எப்போது? என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் டன் கபேய் நேற்று செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.


பீஜிங்,

லடாக்கில் கடந்த ஆண்டு சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியை தடுத்தபோது இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பதற்காக இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

இதில் ராணுவ கமாண்டர் மட்டத்தில் 8 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. கடைசியாக கடந்த 18-ந்தேதியும் வெளியுறவு அமைச்சக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை எப்போது? என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் டன் கபேய் நேற்று செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், ‘எல்லை சூழல் பொதுவாக நிலையாக உள்ளது. இந்த விவகாரத்தில் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் இந்தியாவுடன் தொடர்புகளை தொடர சீனா விரும்புகிறது. இதே நோக்கத்துடன் சீனாவுடன் இந்தியாவும் இணைந்து பணியாற்றும் என எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.

எல்லையில் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக 9-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்து வருவதாக கூறிய டன் கபேய், ஏற்கனவே நடந்த 8-வது சுற்று பேச்சுவார்த்தைக்குப்பிறகு முன்கள வீரர்களை விலக்குவது குறித்து இரு தரப்பும் தொடர் பரிசீலனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page