கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்ததால் கடற்கரை ‘களை’ இழந்தது. போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும் ஆனால் நேற்று கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது.
இதனால் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மேலும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை ‘களை’ இழந்தது.
கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, சன்செட் பாயிண்ட் செல்லும் இடம் போன்ற இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரைக்கு யாரும் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உறவினர்கள், நண்பர்களுடன் கேக் வெட்டி அமைதியான முறையில் புத்தாண்டு தினத்தை கொண்டாடினர். கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் பிரார்த்தனை நடந்தது.