சாதனை புரிந்த சிற்பக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
சிற்பக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களை பாராட்டும் வகையில் தமிழக அரசின் கலைப்பாண்பாட்டு துறையால், ஆண்டுதோறும் மரபுவழி பிரிவில் ஒரு கலைஞருக்கும், நவீனபாணி பிரிவில் ஒரு கலைஞருக்கும், கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு, ஒரு கலைஞருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் பணமுடிப்பும், சான்றிதழும் வழங்கப்பட்டு வந்தது.
தமிழக சட்டமன்றத்தில் 24.3.2020 அன்று நடந்த கலை பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின்போது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைச்செம்மல் விருது தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், விருதாளர்களின் எண்ணிக்கை 2-ல் இருந்து 6 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இதை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.