வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர் அவர்கள் ஐந்தருவி மற்றும் புலியருவியில் குளித்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று பழைய குற்றாலம் அருவியிலும் காலையில் இருந்தே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று புத்தாண்டு தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர்.