சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இது குறித்து தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதிகளில் நீண்டநாள் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.238 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டசபையில் 2019-20-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதில் ரூ.50 கோடி செலவிடப்பட்டது. எனவே செலவிடப்படாத ரூ.188 கோடி திரும்ப ஒப்பளிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதினார். அதில், அந்த பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக, ஏற்கனவே ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.160 கோடியை அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்தது. ஒப்பளிக்கப்பட்ட தொகையில் இருந்து ரூ.111 கோடி தொகையை அரசு அனுமதித்து ஆணை பிறப்பிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.