மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ மாறிமாறி திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கால்வாய் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 400 கனஅடியில் இருந்து வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணை நீர்மட்டம் 105.07 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,083 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.