புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

Spread the love

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.


புதுச்சேரி,

உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து உள்ளிட்ட மாமூல் வாழ்க்கை அனைத்தும் முடங்கின. இதையடுத்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பியது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கடந்த (டிசம்பர்) மாதம் 17-ந் தேதி முதல் இளங்கலை, முதுகலை படித்து வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்தநிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என்று புதுவை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பள்ளிகள் இயக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட உள்ளதையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதுடன் பள்ளி வளாகம், வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சமூக இடைவெளியுடன் மாணவர்களை வகுப்பறையில் அமர வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page