12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி: துபாயில் முதல் டோஸ் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் ஆர்வம்

Spread the love

12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதல் டோஸ் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் துபாயில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகிறார்கள்.


கொரோனா தடுப்பூசி

சமீபத்தில் அமெரிக்க நாட்டில் 12 வயது முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் 100 சதவீதம் திறனுடையதாக உள்ளது என முடிவுகள் வெளிவந்தது. இதையடுத்து, அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் குடியிருப்பு விசா பெற்று வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாணவர்கள் போட்டு செல்கின்றனர்
துபாயில் சுகாதார அமைச்சகம் சார்பில் கிராண்ட் ஹயாத் வளாகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா தடுப்பூசி முகாமில் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து கொரோனா தடுப்பூசியை போட்டு செல்கின்றனர். அந்த முகாமில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள இந்திய தனியார் பள்ளிக்கூடத்தின் சார்பில் மட்டும் வாரத்திற்கு 2 ஆயிரம் மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு தனியார் பள்ளிக்கூடத்தின் சார்பில் வரும் வாரத்தில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ஜூலை மாதம் முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தடுப்பூசிதான் ஒரே வழி என பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page