கொரோனா: 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 5 கோடி டோஸ்கள்; இந்தியாவில் அனுமதி கேட்கும் பைசர்

Spread the love

 

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் ஆகிய ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ தடுப்பூசிகளே தற்போது இரண்டு முதன்மையான தடுப்பூசிகளாக இருக்கின்றன.ரஷியாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே செலுத்தப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 


தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு வழங்கியவை மற்றும் மாநிலங்கள் கொள்முதல் செய்தவையாக மொத்தம் 22 கோடியே 59 ஆயிரத்து 880 டோஸ் தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதுவரை பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது

மாநிலங்கள் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. ஆனால், பஞ்சாப் அரசுக்கும், டெல்லி அரசுக்கும் தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது என்று மாடர்னா மற்றும் பைஸர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தசூழலில் தடுப்பூசி விற்பனை குறித்து மத்திய அரசுடன் பைஸர் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

பைஸர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் “ இந்தியாவில் எங்கள் தடுப்பூசியை விற்பது தொடர்பாக நாங்கள் மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறோம். இந்தியாவில் விரைவில் பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசுடன் பைஸர் மருந்து நிறுவனம் நடத்திவரும் பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை சில நிபந்தனைகளுடன் ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்குள் வழங்கத் தயாராக இருப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் செலுத்தலாம்.

இந்தியாவில் உள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு எதிராக பைஸர் தடுப்பூசி சிறப்பாக செயல்படும். பைஸர் தடுப்பூசி 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை செல்சியஸில் ஒருமாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

சமீபத்தில் இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு ஒன்றில், உருமாற்றம் அடைந்த பி.1.617.2 வைரசுக்கு எதிராக பைஸர் தடுப்பூசி 87 சதவீதம் வீரியமாகச் செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனமும் மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது. இந்தியாவில், சிப்லா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்து மாடர்னா நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தியாவிலேயே உற்பத்திையத் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக இந்தியாவின் தடுப்பூசி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு 3 முதல் 4 கோடி தடுப்பூசிகளை வழங்கிவிடுவோம் எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page