2-வது டோசுக்கு வேறு தடுப்பூசி போடலாமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டிருந்த நிலையில், 2-வது டோஸ் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
இது மாநிலம் மட்டுமின்றி தேசிய அளவிலும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த பிரச்சினைக்கு நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய கொரோனா தடுப்பு சிறப்புக்குழு தலைவருமான டாக்டர் வி.கே.பால் நேற்று விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், ‘2 டோஸ்களுக்கும் வெவ்வேறு தடுப்பூசி போட்டுக்கொண்டால், பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. உண்மையில், வெவ்வேறு தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வது வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என்று ஒரு கதையும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்து உறுதியான முடிவு எடுப்பதற்கு, மேலும் ஆய்வு மற்றும் புரிதல் தேவைப்படும்’ என்று கூறினார்.