அரசாங்கம், மக்கள் என இதுவரை இந்தியாவுக்கு மொத்தம் ரூ.3620.91 கோடி மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
கொரோனா பாதிப்பின் முதல் அலையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு மனிதநேய அடிப்படையில் இந்தியா மருந்துகள், மருத்துவ பொருட்களை வழங்கி உதவியது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் அதிர்ச்சி தெரிவித்த உலக நாடுகள் அனைத்தும் மருத்துவ பொருட்கள், தடுப்பூசிகள் உள்ளிட்ட இந்தியாவுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது.
இதேபோன்று, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று கொண்ட ஜோ பைடன் தலைமையிலான அரசு, இந்தியாவுக்கு தேவையான நிவாரண உதவிகளை அளிக்க முன்வந்தது. இதற்காக பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக பைடன் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த நிலையில் அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறையின் உதவி செயலாளர் (பொறுப்பு) டீன் தாம்சன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அமெரிக்க அரசாங்கம், மாநில அரசுகள், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நாட்டின் குடிமக்கள் என இதுவரை மொத்தம் ரூ.3620.91 கோடி அளவு மதிப்பிலான நிவாரண உதவிகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி வினியோகத்திற்கான எங்களுடைய ஆர்டர்களில் ஒன்றையும் இந்தியாவுக்கு வழங்க நாங்கள் உத்தரவிட்டு உள்ளோம். இதனால், இந்தியாவுக்கு கூடுதலாக 2 கோடி அளவில் ஆஸ்டிராஜெனிகா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என கூறியுள்ளார்.