தன்னலம் கருதாமல் பணியாற்றும் ‘டாக்டர்களுக்கு அரசு துணை நிற்கும்’ – எடப்பாடி பழனிசாமி உறுதி

Spread the love

மரணம் அடைந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு கிளம்பியது குறித்து வேதனை தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர்கள் தன்னலம் கருதாமல் பணியாற்றுபவர்கள் என்றும், அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் உறுதி அளித்து உள்ளார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 55 வயதான டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அவரது உடலை ஆம்புலன்சில் டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கல்லறைக்கு கொண்டு சென்ற போது, அந்த பகுதி மக்கள் அங்கு உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அண்ணாநகர் வேலங்காடு பகுதியில் உள்ள கல்லறைக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதி மக்களும் அங்கு உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஆம்புலன்ஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சேதம் அடைந்ததோடு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலையரசன், செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாக்டரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கு முன், கொரோனா நோய்த் தொற்றால் இறந்த ஆந்திர மாநில டாக்டர் ஒருவரின் உடலை எரிக்க அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உடலை திருப்பி அனுப்பியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த இரு சம்பவங்களுக்கும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மனித குலத்துக்கே சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி, இந்த அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. எனவே, களத்தில் முன்னின்று பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன்.

இவர்களது பணியினை நாடே போற்றி, நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை, இறைவனுக்கு நிகராக நான் கருதுகின்றேன்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால், மருத்துவப் பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தன்னலம் கருதாமல், மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரை துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும், டாக்டர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், அ.தி.மு.க. அரசு உங்கள் பக்கம் முழுமையாக நிற்கும் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page