சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 144 தடை உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 144 தடை உத்தரவு மே 17 வரை நீட்டிப்பு
சென்னை:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 3-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு அதாவது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில், பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதை தடை செய்யும் ஆணை (144 தடை உத்தரவு) இன்று இரவு 12 மணி முதல் 17-ம் தேதி இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.