அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகல்: அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பிய ஈரான்

Spread the love

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா.வுக்கு ஈரான் அரசு கடிதம் அனுப்பியது.

டெஹ்ரான்,

அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.

‘அணுசக்தி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கு பிரதி பலனாக, அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும்.

ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசுக்கு, ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷாரீப் கடிதம் ஒன்றை எழுதிஉள்ளார்.

அந்த கடிதத்தில், “அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, ஐ.நா.வின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் ஆகும். அதன் விளைவுகளுக்கு ஐ.நா. சபை அமெரிக்காவை உடனடியாக பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page