மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன்

Spread the love

10 ஆம் வகுப்பு மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை தமிழக அரசு தள்ளிவைத்தது. இது தவிர பிளஸ்-1 பொதுத் தேர்வின் இறுதி நாள் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று பலரும் பேசி வந்த நிலையில், அந்த தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பதில் அளித்தார். இருப்பினும், சில கல்வியாளர்கள், கல்வி சார்ந்த அமைப்புகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக சில கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த குழப்பங்களின் மத்தியில் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் தேர்வு எப்போது நடைபெறும்? என்பது குறித்து அரசு விளக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையும் விடுக்கின்றனர்.

இந்தநிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், பத்தாம் வகுப்பு மாணவர்களின் மனநிலையையும் அரசு பரிசீலனை செய்துள்ளது என்றும் தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page