பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்துக்கு பின்னர், ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டில் 75 புள்ளிகளைக் குறைத்தது. இதனால் வட்டி விகிதம் குறைந்தது. மேலும், வங்கிகளில் கடன் பெற்றவர்கள், தவணையை திருப்பிச் செலுத்த 3 மாத சலுகை வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த சலுகைகளால் மக்கள் எந்த அளவுக்கு பயன் பெற்றுள்ளார்கள், மேலும் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் முயற்சிகள் பற்றி பொதுத் துறை வங்கித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வங்கிகளின் கடன் நிலவரம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கித் துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.
மேலும் அவசர நிலை கடனாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் நடப்பு கடன் தொகையில் 10 சதவீதம் வரை பெறலாம். அதிகபட்சம் ரூ.200 கோடி வரை பெறலாம் என்கிற இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விரிவாக பேச உள்ளதாக தெரிகிறது.