பெண் செய்தியாளரின் கொரோனா கேள்வியால் செய்தியாளர்கள் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தி வெளியேறினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி டிரம்ப்பிடம், பெண் நிரூபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது சிபிஎஸ் நியூஸின் வெள்ளை மாளிகையின் நிருபர் வீஜியா ஜியாங், 80,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துவிட்டபோதும், கொரோனா வைரஸ் பரிசோதனையை உலகளாவிய போட்டியாக ஏன் பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும், இது சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி என கூறினார்.
ஆனாலும் அந்த பெண் செய்தியாளர் “ஐயா, நீங்கள் ஏன் என்னிடம் குறிப்பாக இதைச் சொல்கிறீர்கள்?” என கேட்டார்.
நான் உங்களுக்கு சொல்கிறேன்” நான் இதை குறிப்பாக யாரிடமும் சொல்லவில்லை. இது போன்ற ஒரு மோசமான கேள்வியைக் கேட்கும் எவரிடமும் இதைச் சொல்கிறேன்என டிரம்ப் கூறினார்.
இது ஒரு மோசமான கேள்வி அல்ல” என்று ஜியாங் கூறினார்.
தொடர்ந்து பெண் செய்தியாளரும் மற்ற செய்தியாளர்களும் விடாமல் கேள்விகளை அடுக்கியதால், செய்தியாளர் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டிரம்ப் பாதியிலேயே கிளம்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.