ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 113 வயது பாட்டி கொரோனா தொற்றுக்கு ஆளாகி முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.
மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் ஓலட் நகரில் உள்ள முதியோர் இல்லமொன்றில் தங்கி இருப்பவர், மரியா பிரன்யாஸ். 113 வயதான இந்தப் பாட்டி கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அண்மையில் இவர் முற்றிலுமாக குணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
உலகிலேயே மிக அதிக வயதில் கொரோனாவை வென்ற பெண் இவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவருடன் முதியோர் இல்லத்தில் இருந்த 17 பாட்டிமார்கள் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர் என்பது குறிப்பித்தக்கது.
1907-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி பிறந்த மரியா பிரன்யாஸ் 1918-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி 5 கோடி மக்களின் உயிரைக் குடித்த ‘ஸ்பானிஷ் புளூ’ என்னும் மிகக் கொடிய நோய் காலத்திலும் உயிர் தப்பியவர். இரண்டு உலகப் போர்களையும் கண்டவர். இவருக்கு 3 பிள்ளைகள், 11 பேரக்குழந்தைகள், 13 கொள்ளு பேரக் குழந்தைகள் உண்டு.