புர்கினாபாசோவில் பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த 12 பேர் மர்ம மரணம் அடைந்து உள்ளனர்.
வாகடூகு,
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினாபாசோவில் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்களின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை தலைநகர் வாகடூகுவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படை போலீசார் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி புலாஸ் என்ற பழங்குடியினத்தை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விசாரணைக்காக வாகடூகுவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் லாக்அப்பில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை லாக்அப்பில் அடைக்கப்பட்டிருந்த 25 பேரில் 12 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த போலீசாரே அவர்களை கொலை செய்ததாக அந்த நாட்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.