ராஜ்தானி சிறப்பு ரெயில்கள் மூலம் 5 நாட்களில் 3½ லட்சம்பேர் சொந்த ஊர் சென்றனர்

Spread the love

ராஜ்தானி சிறப்பு ரெயில்கள் மூலம் 5 நாட்களில் 3½ லட்சம்பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இவர்கள் மூலம் ரெயில்வேக்கு ரூ.69 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

புதுடெல்லி,

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கடந்த 1-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல், ஊரடங்கு காரணமாக, சொந்த ஊருக்கு திரும்ப முடியாதவர்களுக்காக, கடந்த 12-ந் தேதி முதல் ராஜ்தானி வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

டெல்லிக்கும், முக்கிய நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரெயில்களில் ராஜ்தானி ரெயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 5 நாட்களில், இந்த ரெயில்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 634 பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன்மூலம் ரெயில்வேக்கு 69 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 735 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

முதலில், இந்த ரெயில் முன்பதிவில், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த ரெயில்களுக்கு அதிகமான வரவேற்பு இருப்பதால், வருகிற 22-ந் தேதி முதல் இயக்கப்படும் ரெயில் களுக்கு காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் அனுமதிக்கப்படுகிறது.

அதாவது, முதல் வகுப்பு ஏ.சி., எக்சிகியுட்டிவ் வகுப்புக்கு தலா 20 டிக்கெட் வரையும், மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 100 டிக்கெட் வரையும், இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 50 டிக்கெட் வரையும், தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கு 200 டிக்கெட் வரையும், சேர்கார் பெட்டிக்கு 100 டிக்கெட் வரையும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் அனுமதிக்கப்படும்.

ஆனால், ஆர்.ஏ.சி. டிக்கெட் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page