இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகள் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கொரோனா தனக்கு எதிராக போடப்படும் அத்தனை தடைகளையும் தகர்த்து எறிந்துவிட்டு, பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் உயிரிழந்துள்ளனர்..