வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக திண்டுக்கல்லில் இருந்து நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்களுக்காக திண்டுக்கல்லில் இருந்து நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
திண்டுக்கல்:
பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில் இருந்தனர். மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து 5 அரசு பஸ்களில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் பீகார் மாநிலத்தை சேர்ந்த 266 தொழிலாளர்கள் இன்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு ரெயிலில் செல்ல உள்ளனர்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அம்மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த 4125 தொழிலாளர்கள் தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் வசித்த 50 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 120 தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஸ்பின்னிங் மில் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நாளை (20-ந் தேதி)முதல் கட்டமாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களுக்கும் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.