மத்திய அரசின் வரி வருவாய் பகிர்வின் மூலம் தமிழகத்துக்கு ரூ.1,928 கோடி கிடைக்கிறது உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.295 கோடி நிதி

Spread the love

மத்திய அரசின் வரி வருவாய் பகிர்வின் மூலம் தமிழகத்துக்கு ரூ.1,928.56 கோடி நிதி கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் பட்ஜெட்டில், 2020-21-ம் ஆண்டில் மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் ரூ.7.84 லட்சம் கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்து மாநிலங்களுக்கு, நிதிக் கமிஷனின் பரிந்துரைப்படி நிதிப் பகிர்வு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், மாநில அரசுகளுக்கு 41 சதவீத வரி வருவாயை பகிர்ந்து அளிக்கும்படி 15-வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்து இருந்தது. ஆனால் 14-வது நிதிக் கமிஷன் 42 சதவீத வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி பரிந்துரைத்திருந்தது.

இந்த நிலையில் மாநிலங்களுக்கான மே மாத தவணைக்கான நிதிப்பகிர்வுக்காக 46 ஆயிரத்து 38 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. இதில் உத்தரபிரதேசம் அதிகபட்சமாக ரூ.8,255.19 கோடி நிதியை பெற்றுள்ளது.

ஆந்திரா ரூ.1,892.64 கோடியையும், கர்நாடகா ரூ.1,678.57 கோடியையும், கேரளா ரூ.894.53 கோடியும், தெலுங்கானா ரூ.982 கோடியும் பெற்றுள்ளன. தமிழகத்துக்கு பகிர்வுப் பங்காக ரூ.1,928.56 கோடி நிதி கிடைத்துள்ளது.

மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. நிதிக் கமிஷனின் பரிந்துரையின்படி இந்தத் தொகையை மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பெற்று வருகின்றன.

அந்த வகையில் 2020-21-ம் ஆண்டுக்கான தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக ரூ.295 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page