விடைத்தாள் திருத்தும் பணி முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர உத்தரவு

Spread the love

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர வேண்டும் என்றும், பணிகளில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்றும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள் தேர்வான வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளை சுமார் 34 ஆயிரம் பேர் தேர்வு எழுத முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியது.

இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் தேர்வுஎழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அவர்களுக்கான தேர்வு அட்டவணையையும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று முன்தினம் அறிவித்தார். அதில், அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் முடிவு அடைந்த பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும்பணி வருகிற 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளதாக கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த தேர்வுக்கான பணிகளில் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் விடைத்தாள் திருத்தும்பணிகள் நடைபெற உள்ளது.

ஒரு அறைக்கு தலைமை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 8 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முக கவசம் அணிந்து மட்டுமே ஆசிரியர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறை அனுப்பியுள்ள உத்தரவில், ‘விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது என்றும், அனைவரும் கட்டாயம் பணியாற்றிட வேண்டும் என்றும் கல்வித்துறை திட்டவட்டமாக கூறி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page