வங்காளதேசத்தை உலுக்கிய ‘உம்பன்’ புயல் 10 பேர் பலி

Spread the love

உம்பன்’ புயல் வங்காளதேசத்தின் கடலோர மாவட்டங்களை கடுமையாக உலுக்கியது.

டாக்கா,

வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் உம்பன் புயல் நேற்று முன்தினம் மேற்கு வங்காளத்தின் டிகா மற்றும் வங்காளதேசத்தின் ஹாடியா தீவுக்கு இடையில் கரையை கடந்தது.

இந்த புயல் வங்காளதேசத்தின் கடலோர மாவட்டங்களை கடுமையாக உலுக்கியது. பர்குனா, சத்கீரா, பிரோஜ்பூர், பதுவாகாளி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மணிக்கு பல மைல் வேகத்தில் சூழன்றடித்த சூறாவளி காற்றில் சிக்கி ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்த சேதம் அடைந்தன. மரங்கள் சாய்ந்தது மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 13 வயது பெண் உள்பட 10 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மாயமாகி இருப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 2007-ம் ஆண்டு 3,500-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட ‘சிதர்’ புயலுக்கு பிறகு வங்காளதேசத்தை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த புயலாக ‘உம்பன்’ புயல் பார்க்கப்படுகிறது.

இந்த புயல் வடகிழக்கு திசையில் மேலும் நகர்ந்து படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாக வங்காளதேச வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page