சென்னை: வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவும்படி வேண்டுகோள் விடுத்த இளைஞருக்கு முதல்வர் பழனிசாமி உதவி செய்துள்ளார். முதல்வரின் இந்த உடனடி நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து டுவிட்டரில் இளைஞர் ஒருவர் பதிவிட்டதாவது: என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு வைரஸ் அறிகுறி உள்ளது. நெஞ்சு வலியால் கஷ்டப்படுகிறேன். டாக்டரிடம் சென்றால் திட்டி அனுப்புகிறார்கள், வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவுங்கள் ஐயா. இல்லையெனில் தற்கொலை தான் முடிவு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு டுவிட்டரில் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘கவலை வேண்டாம் தம்பி.. அமைச்சர் விஜயபாஸ்ர், பீலா ராஜேஷ் ஐஏஎஸ்., அந்த இளைஞருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என பதிவிட்டார்.
இதனையடுத்து சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், முதல்வருக்கு பதில் டுவிட் செய்துள்ளார். அதில், அவரிடம் பேசிவிட்டதாகவும், அவர் கடலூரில் இருப்பதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் பதிவிட்டார். இளைஞரின் வேண்டுகோளை ஏற்று, துரித நடவடிக்கை எடுத்த முதல்வரையும், சுகாதார செயலாளரையும், பலரும் பாராட்டி வருகின்றனர்.