திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு ஆகாது: ஒடிசா ஐகோர்ட்டு அதிரடி கருத்து

Spread the love

திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு ஆகாது என்று ஒடிசா ஐகோர்ட்டு கூறியுள்ளது.

கட்டாக்,

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவரும், அதே பகுதியை சேர்ந்த 19 வயதான பழங்குடியின இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தனர். இதில் அப்பெண் 2 தடவை கர்ப்பம் அடைந்தார். இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம், அந்த மாணவர் மீது அப்பெண் போலீசில் புகார் செய்தார்.அதில், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொண்டதாகவும், அதில் 2 தடவை கர்ப்பம் தரித்தபோது, அம்மாணவர் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கலைக்க வைத்ததாகவும் அப்பெண் கூறியிருந்தார்.

இதன்பேரில், அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 6 மாதங்களாக அவர் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனுவை கீழ்க்கோர்ட்டு தள்ளுபடி செய்ததால், ஒடிசா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு, நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவை அனுமதித்த நீதிபதி, அரசு தரப்புக்கு ஒத்துழைப்பதுடன், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டக்கூடாது என்று மாணவருக்கு நிபந்தனை விதித்தார்.

அப்போது, நீதிபதி பனிகிரஹி அதிரடி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

வாக்குறுதி அளித்தாலும், வாக்குறுதி அளிக்காவிட்டாலும், ஆண்-பெண் இருவரும் தங்கள் விருப்பத்தின்பேரில், ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொள்வது இந்திய தண்டனை சட்டப்படி கற்பழிப்பு குற்றம் ஆகாது.

இந்த பிரச்சினை குறித்து விரிவாக ஆராய வேண்டும். பெண்கள், விருப்பத்தின்பேரில் உறவு வைத்துக்கொள்ளும் விவகாரங்களில் கற்பழிப்பு வழக்கை பயன்படுத்துவது சரிதானா என்று சிந்திக்க வேண்டும். இருப்பினும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து ஆண்களால் வலையில் வீழ்த்தப்படும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, ஏழை பெண்களின் நிலைமைக்கு தீர்வு காண கற்பழிப்பு சட்டங்கள் தவறி விடுகின்றன என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page