தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது – பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்வு

Spread the love

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக உள்ளது.

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்தியாவில் 2-வது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. முதல் இடத்தில் மராட்டிய மாநிலம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மராட்டியம், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தமிழர்களால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மராட்டியத்தில் இருந்து வந்த 35 பேரும், குஜராத்தில் இருந்து வந்த 6 பேரும், தெலுங்கானாவில் இருந்த வந்த 3 பேரும், டெல்லி, உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த தலா 2 பேரும், கேரளாவில் இருந்து வந்த ஒருவரும் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் நேற்று 646 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவமனையில் நேற்று 611 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழக மருத்துவமனையில் இதுவரை 127 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னை ஐ.சி.எப். ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, சென்னையை சேர்ந்த 57 வயது ரெயில்வே ஊழியர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 45, 55, 70 வயது பெண்கள் மற்றும் 75 வயது ஆணும் நேற்று உயிரிழந்தனர்.

சென்னை தனியார் மருத்துவமனையில் 53 வயது பெண் மற்றும் 65 வயது ஆண் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது ஆணும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலையை சேர்ந்த 76 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 127 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் இதுவரை 91 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்து 906 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

நேற்று சென்னையில் 510 பேரும், திருவள்ளூரில் 25 பேரும், செங்கல்பட்டில் 23 பேரும், திருவண்ணாமலையில் 14 பேரும், காஞ்சீபுரத்தில் 13 பேரும், தூத்துக்குடி, சேலத்தில் தலா 10 பேரும், கள்ளக்குறிச்சி, கடலூரில் தலா 8 பேரும், கன்னியாகுமரியில் 4 பேரும், வேலூரில் 3 பேரும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரையில் தலா 2 பேரும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page