பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்; ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு ஏற்பாடு

Spread the love

சென்னை :
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணிகள் இன்று(மே 27) துவங்கும் நிலையில், திருத்தும் மையங்களில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளின் பட்டியலை ஒட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச்சில் முடிந்தன. விடைத்தாள்கள், கட்டுக்காப்பு மையங்களில், இரண்டு மாதங்களாக, போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடைத்தாள் திருத்த பணிகள், இன்று துவங்க உள்ளன. ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், திருத்தும் பணிகளை திட்டமிட்டபடி துவங்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருத்தும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை என்றால், கல்வி துறையின் சார்பில் கார் அனுப்பி, அவர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 44 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து ஆசிரியர்களுக்கும், திருத்தும் மையங்களில், முகக் கவசம் இலவசமாக வழங்கப்படும். மையங்களில் சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், ஒவ்வொரு மையங்களிலும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு யார் வாயிலாவது, கொரோனா பரவாமல் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அருகில் உள்ள, கொரோனா வுக்கு சிகிச்சை தரும் மருத்துவமனைகளின் முகவரி, தொலைபேசி எண், சுகாதாரத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட பட்டியலை, பள்ளிகளில் ஒட்டிவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருத்தும் மையங்களில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் இன்றி பணியில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிடுக்கிப்பிடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page