சிங்கப்பூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்

Spread the love

சிங்கப்பூர் :
கொரோனா தாக்கத்தால், இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சிங்கப்பூர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், கொரோனாவால், 32 ஆயிரத்து, 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 23 பேர் பலி ஆகியுள்ளனர். அங்கு, ஏப்.,7ல் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், படிப்படியாக கடுமையாக்கப் பட்டன.இந்நிலையில், சிங்கப்பூர் வர்த்தம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 1998ல், ஆசிய நிதிச் சந்தை நெருக்கடியின் போது, சிங்கப்பூர் பொருளாதாரம், 2.2 சதவீதம் பின்னடைவைக் கண்டது.கடந்த, 2001ல் சர்வதேச வலைதள நிறுவனங்களின் சரிவின் போது, பொருளாதார வீழ்ச்சி, 1.1 சதவீதமாக இருந்தது.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தால், நடப்பாண்டு, சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி, 4 – 7 சதவீதமாக பின்னடைவைக் காணும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில் 1 – 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த வகையில், இருபது ஆண்டுகளுக்குப் பின், சிங்கப்பூர் பொருளாதாரம், மிக மோசமான சரிவை சந்திக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒரே இடத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கட்டுமானம், கப்பல் மற்றும் பொறியியல் துறைகளில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, நாட்டின் உற்பத்தியை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், ஜூன், 2 முதல் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த, அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page