புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

Spread the love

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து வருத்தம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதனையடுத்து தமிழகத்தில் இருந்து இதுவரை 2,28,000 தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் சொந்த இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், 3,17,000 பேருக்கு ரேஷனில் உணவும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ரயில் கட்டண செலவை மாநிலங்களே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களே அவர்களுக்கான உணவு, நீர் மற்றும் இருப்பிடத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page