புதுடில்லி:
நிரந்தர ஊரடங்கால் தீர்வு இருக்காது என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் அதிக பாதிப்பில் 3வது இடத்தில் உள்ள டில்லியில் இதுவரை 17,386 பேர் பாதிக்கப்பட்டு, 398 பேர் உயிரிழந்துள்ளனர். 4ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் (மே 30) முடிவடையவுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் 20 சதவீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என டில்லி அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று செய்தியாளர்களிடம் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது:
டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அதற்காக யாரும் பீதியடைய வேண்டாம். இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலோ அல்லது மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை இருந்தாலோ டில்லியின் நிலைமை பற்றி கவலைப்பட வேண்டும். நிரந்தர ஊரடங்கால் எந்த தீர்வும் இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.