நியூயார்க் :
ஐ.நா. அமைதிப்படையில் சிறப்பாக பணியாற்றிய இந்திய பெண் ராணுவ மேஜர் சுமன் கவானிக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் இந்திய ராணுவ மேஜர் சுமன் கவானிக்கு 2019ம் ஆண்டுக்கான பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படையின் சர்வதேச தினத்தை முன்னிட்டு தெற்கு சூடானில் ராணுவ பார்வையாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக ஐ.நா. சபை தலைவர் அன்டோனியா குட்டரெஸ் இதற்கான விருதினை சுமன் கவானியிடம் வழங்கினார்.
விருது குறித்து சுமன் கவானி கூறியதாவது: இந்த விருது எனக்கு மிகப்பெரிய மரியாதை. இதற்காக தெற்கு சூடானில் பணியாற்றிய அமைதிப்படையினருக்கும் இந்தியாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த விருதை இந்தியாவின் அமைதி காக்கும் படையினரின் சார்பாக ஏற்கும் நான் அவர்களின் தியாகத்தை நினைவில் கொள்கிறேன்.
அழகான தெற்கு சூடானில் அமைதிப்படையின் ராணுவ பார்வையாளராக பணியாற்றியது என் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைதி மற்றும் பாதுகாப்பு படைகளில் ஆண்களுக்கு நிகராக செயல்படும் பெண்களின் அர்ப்பணிப்பு உணர்வினை அங்கீகரிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பில் 2016ம் ஆண்டு இந்த விருது உருவாக்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் சுமன் கவானி என்பது குறிப்பிடத்தக்கது.