தெலுங்கானாவில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் முடிவு செய்துள்ளார்.
ஐதராபாத்,
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைய இருந்தது.
இதற்கிடையே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று முன்தினம் பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், ஜூன் மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதேசமயம் பல கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.
இதனை தொடர்ந்து, மத்திய பிரதேசம், பஞ்சாப், தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மத்திய பிரதேசத்தில் ஜூன் 15ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30ம் தேதி வரையும், மேற்கு வங்கத்தில் ஜூன் 15ம் தேதி வரையும், தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி ஊரடங்கை நீட்டிப்பதாக அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானாவும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர பிற பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.