நள்ளிரவு முதல் அமலாகும் சட்டம் – வைரலாகும் வீடியோ

Spread the love

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய அந்த சட்டம் தடை விதிப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.

நள்ளிரவு முதல் அமலாகும் சட்டம் – வைரலாகும் வீடியோ
ஃபேஸ்புக்

போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவுடன் இணைக்கப்பட்டு இருக்கும் குறுந்தகவலில், நள்ளிரவு முதல் பேரழிவு மேலாண்மை சட்டம் நாடு முழுக்க அமலாக்கப்படுகிறது. இது அரசு துறைகளுக்கு அப்பாற்பட்டது. இதனால் யாரும் கொரோனாவைரஸ் பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ கூடாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டத்தை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் வீடியோவில் போலீஸ் அதிகாரி, யாரும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பதிவிட கூடாது, மீறினால் குரூப் அட்மின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மார்ச் 24 ஆம் தேதி மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து, கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் தீவிரம் அடையாமல் இருக்க செய்ய பேரழிவு மேலாண்மை சட்டம், 2005 அமலாக்கப்படும் என தெரிவித்து இருந்தது. இந்த சட்டத்தின் படி அரசு துறைகள் தவிர வேறும் யாரும் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பதிவிட கூடாது என குறிப்பிடப்படவில்லை.

 

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது, ஜூலை 13, 2018 முதல் இணையத்தில் வலம் வருவது தெரியவந்துள்ளது. மேலும் வீடியோவில் போலீஸ் அதிகாரி கொரோனா வைரஸ் பற்றி எந்த தகவலையும் கூறவில்லை. அந்த வகையில் குறுந்தகவல் மற்றும் வைரல் வீடியோ ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதது உறுதியாகிவிட்டது.

மார்ச் 31 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறபித்த ஆணையின் படி பேரழிவு மேலாண்மை சட்டத்தின் 54 ஆவது பிரிவின் படி, போலி தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். மேலும் போலி தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வது மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் பரப்புவது குற்ற செயல் என இந்த 54 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வைரல் வீடியோவில் உள்ளது போன்று கொரோனா வைரஸ் பற்றி பதிவுகளை மக்கள் சமூகவலைதளங்களில் பதிவிட கூடாது என்ற தகவல் முற்றிலும் பொய் என உறுதியாகிவிட்டது. மேலும் போலி தகவல்களை பரப்புவது குற்ற செயல் ஆகும்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page